தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இராசேந்திரன்

0 மறுமொழிகள்

"சமூக மதிப்போடு சம்பாத்தியமும் தரும் மொழி தமிழ்''!

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக ஒன்பதாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பொறுப்பில் இரண்டரை ஆண்டுகள், மொழிபெயர்ப்பியல் அகர முதலித் திட்டக் கூடுதல் முழுப் பொறுப்பு இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக மூன்றாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனி அலுவலராக இரண்டாண்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை மற்றும் விரிவுரையாளராக மூன்றாண்டுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகத்தில் பன்னிரண்டாண்டுகள், குறள்பீடம் பொறுப்பு, மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர் என்று 34 ஆண்டுப்பணி அனுபவம்.

மேலும்

சுவடிகளைப் பதிப்பித்தல், வெளியிடல், தமிழ்ப் பயிற்றுவித்தல், தமிழ் ஆய்வு, தமிழாய்விதழ் பதிப்பு, மின்-அகராதி, பிழைதிருத்தி போன்ற கணினித் தமிழ் வளர்ச்சிப் பணிகள், சங்க இலக்கியங்களை இந்தியிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்தல், செம்மொழித் தமிழ் இலக்கியத் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், தமிழாய்வு மற்றும் நிர்வாகப் பணிகளாக என் 34 ஆண்டுக் காலப் பணி அனுபவங்கள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானதற்கு இவரைவிடச் சிறந்த அனுபவசாலி நிச்சயமாக இருக்கமுடியாது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் ம. இராசேந்திரனை சென்னை, திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உங்கள் குடும்பம் பற்றி?

பிறந்த ஊர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னவாசல். சொந்தஊர் குடவாசல். ஞானாம்பாள் - மகாதேவன் தம்பதியரின் ஒரே மகன். இரண்டு சகோதரிகள். என் தந்தை ஒரு தவில் வித்வான். எங்கள் குடும்பம் ஓர் இசைக்குடும்பம். எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே தந்தை காலமாகிவிட்டார். தாயின் அரவணைப்பிலும் தாய்மாமன் வளர்ப்பிலும் பள்ளிப்படிப்பை முடித்தேன்.

இசைக் குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இசை பயிலாமல், தமிழில் ஆர்வம் காட்டியதற்குக் காரணம் என்ன?

இசையும் தமிழும் பிரிக்கமுடியாவை. இசை குடும்பத்தில் இருந்து வந்த நான், இசையும் தமிழுமாக வளர்ந்து, திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றேன். எங்கள் தலைமுறையில் முதன்முதல் படித்து பட்டம் பெற்றது நான்தான். நான் கோபாலகிருஷ்ண ஐயரின் மாணவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அன்றைக்கு இருந்த ஆசிரியர்கள் தமிழுணர்வோடு பேசிப்பழகியதாலும் பாடம் நடத்தியதாலும் எனக்கு தமிழ்மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

உங்களது தொடர் வளர்ச்சிக்குக் காரணம்?

தொடந்து படித்ததுதான்.

உங்கள் துணைவியார், குழந்தைகள் பற்றிக் கூறுங்களேன்?

துணைவியார் பெயர் மைதிலி.

இரண்டு பெண்கள். மூத்தபெண் தென்றல், இளையவள் எழில். என்னுடைய இரண்டு பெண்களுக்கும் கலப்புமணம்தான் நடந்தது. தமிழ்மேக்னா என்று ஒரே ஒரு பேத்தி.



உங்கள் குடும்பத்தில் தமிழிலக்கிய ஆர்வம் எப்படி?

குடும்பத்தில் அனைவருக்குமே தமிழார்வம் அதிகம். என்னுடைய இளைய மகள் மூன்று வயதிலேயே கவிதை சொல்வாள். இதைக்கண்டு நான் வியந்ததுண்டு.

இன்றைக்குத் தமிழ் படித்தால் சமுதாயத்தில் மதிப்பு கிடைப்பதில்லை என்றும், தொழில்நுட்பத்துறை போன்றவற்றில்தான் பணி வாய்ப்புகளும் ஊதியமும் அதிகம் என்றும் கூறிவருகின்றனரே அது குறித்து தங்கள் கருத்தென்ன?

சமூக மதிப்பைத் தருவது மொழி. சம்பாத்தியம் தருவது தொழில்நுட்பத்துறை. சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கையாகாது. சமூகத்தில் மதிப்போடு சம்பாத்தியத்தையும் தரும் ஒரே மொழி தமிழ்மொழி மட்டும்தான்.

உ.வே.சா. தமிழ்ப்படித்ததால் அவருக்கு எந்தவித இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பார்க்கப்போனால் அவர் தமிழ்பயிலாமல் இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை தமிழால் உயர்ந்தவர்கள்தான் அதிகம்.

செம்மொழி ஆய்வு மையம் குறித்து உங்கள் புதிய பணியின் பங்களிப்பென்ன?

செம்மொழி ஆய்வு மையம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படவுள்ளது. அந்த நிதி பகிர்வில் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால், அதன் பணிகளில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்ந்துச் செயலாற்றும்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி கிடைத்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சூழலிலும், ஏற்கெனவே தமிழ் பாடங்களைப் பள்ளிக்குழந்தைகள் படிக்க நேர்ந்ததும், ஆலயங்களில் தமிழ் அனுமதிக்கப்பட்டிருப்பதுமான இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரானது குறித்து மிகுந்த பெருமைப்படுகிறேன்.

தமிழ் வளர்ச்சி குறித்து தங்கள் கருத்து என்ன?

தமிழைத் தனியாக வளர்க்க முடியாது. சார்புப் படுத்தித்தான் வளர்க்கமுடியும், பக்தி காலத்தில் பக்தியை வளர்ப்பதற்காக மொழி வளர்க்கப்பட்டது. ஜனநாயகத் தேர்தல் காலத்திலும் மொழி வளர்க்கப்பட்டது. இன்றைக்கு மொழி வளர்த்தெடுக்கப்போவது எது என்பதைக் கண்டறிந்தால் போதும். அது உலகமயமாக்களில்தான் உள்ளது. உலகமயமாக்கல் என்பது முதலில் குடும்பத்தில் இருந்து உருவாகவேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும், ஒரு தொலைக்காட்சியில் பல்வேறு அலைவரிசைகளைப் பார்ப்பவராகவும் இருக்கின்றனர். எதிலும் ஒற்றுமை கிடையாது. உலகமயமாக்கல் என்பது முதலில் வீட்டுக்குள்ளேயே உருவாகவேண்டும். இந்த ஒற்றுமைதான் உலகமயமாவதற்கு நம்மைத் தயார்படுத்தும்.

கி.மஞ்சுளா

படங்கள்: ஏ.எஸ். கணேஷ்

நன்றி: தினமணியின் ஞாயிறு கொண்டாட்டம்
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

0 comments to "தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இராசேந்திரன்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES